ஹஜ்ஜூப் பெருநாள் கவியரங்கம் 2009
November 28, 2009ஹஜ்
உலகமே சுற்றும்
ஒற்றைப் புள்ளி
திசைகள் சந்திக்கும்
திருப் புள்ளி
கருப்புப் புள்ளிதான்
ஆனால்
காந்தப் புள்ளி
கருப்புப் புள்ளிதான்
ஆனால்
வெள்ளைப் புறாக்களின்
விருப்பப் பள்ளி
ஹஜ்
கழித்தலும் வகுத்தலுமற்ற
கணக்கு
கூட்டலிலும்
பெருக்கலிலும் மட்டுமே
கூடிவரும்
அதிசய ஐந்தொகை
ஹஜ்
ஒற்றுமையின்
உணர் நரம்பு
படைத்தவனைப் பணிதலின்
பாடப் புத்தகம்
ஹஜ்
சகோதரத்துவத்தின்
சாரல்
சமாதானத்தின்
சரித்திரக் குறிப்பு
ஹஜ்
மனித மலர்களின்
மாநாடு
பேதத்தை
பேதமையெனப் பேசும்
பெருங்குரல்
ளு
கஃபா
மனிதப் பூச்சிகள்
மாத்திரமே மொய்க்கும்
கருப்புக் கற்கண்டு
உலகின்
முதலாவதும்
முடிவானதுமான
சமாதானச் சரணாலயம்
கஃபா
வினையறுக்கும்
வீடு
ஆத்மாக்களின்
அபய நாடு
கஃபா
காலமெலாம் சுரக்கும்
கருணை நதி
அருளை மட்டும்
அள்ளித் தரும்
அன்பின் விதி
கஃபா
வலது புறம் சுழலும்
வித்தியாசமான மணிக்கூடு
ஐயாயிரம் ஆண்டுகளாக
ஒரு கணம் தரிக்காமல்
ஓடிக் கொண்டேயிருக்கிறது.
கஃபா -
பள்ளத்தில்தான் இருக்கிறது
ஆனால்
மூமின்களின்
உள்ளத்தில் இருக்கிறது
எப்போதும்
மனித வெள்ளத்தின்
மத்தியில் இருக்கிறது
பள்ளத்தில் இருப்போரைப்
பார்த்துக் கொள்ளும்படி
பணிப்புரை விடுக்கிறது
மன்னனாயிருந்தாலும் சரி
பெரிய
அண்ணனாயிருந்தாலும் சரி
வெள்ளையுடையில்தான்
இங்கு
விஜயம் செய்ய வேண்டும்
முதியவரையும்
இளையவராக்கும்
இரசவாதம்
இங்குதான் நடக்கிறது
அதிசயம் பாருங்கள்
பாவ மூட்டைகளுடன் வருவோர்
பாலகராகத் திரும்புகிறார்கள்
ளு
மக்கா -
முஹம்மத் என்ற
முழுமதியின் பிறப்பிடம்
ஒவ்வொரு முஸ்லிமும்
கால்பதிக்கத் துடிக்கும்
கடைசித் தரிப்பிடம்
மக்கா -
வான்மறை இறங்கிய
வசந்த பூமி
கண்மணி நபிகளின்
கால்கள் பதிந்த
கண்ணியப் பூமி
மக்கா -
கவிதை பிறந்த இடம்
கவிதைகளின்
கவிதைத் தடம்
மக்காவின் புழுதி
மகரந்தம்
மக்காவின் காற்று
சுகந்தம்
மக்காவின் நீர்
மருந்து
மக்காவின் ஒலி
விருந்து
மக்கா
அதிசயங்கள் நிகழும்
அற்புத நகர்
கறுப்பனும் வெள்ளையனும்
கட்டியணைத்துக் கொள்வான்
ஆசியனும் ஆபிரிக்கனும்
ஆலிங்கனம் செய்து கொள்வான்
துருக்கியனும்
அவுஸ்திரேலியனும்
தோளோடு தோள் நிற்பான்
நாடுகள் போர் செய்யும்
பிரஜைகள்
பிணைத்துக் கொள்வார்கள்
இப்படித்தான்
இஸ்லாம்
இணைப்புக் கொடுக்கிறது
ஹஜ்ஜில்தான்
குர்பான் கொடுக்கக்
கற்றுத் தரப்படுகிறது
முதலில் அறு
ஆசையை அறு
பின்னர் அறு
பிணக்குகள் அறு
ஆசையை அறுத்துப்
பிணக்குகள் அறுத்தால்
நேசக் கணக்கு
நிரம்பி வழியும்
இன்றைய பெருநாள்
இனிதே கழியும்
எறி
கல்லை எறி
ஷெய்த்தானுக்குக்
கல்லை எறி
ஊத்தைகள் அகன்றால்
உள்ளம் உயரும்
கெட்டவை அகன்றால்
களிப்புறும் ஆத்மா
விட்டுக் கொடுத்தால்
வேதனை தீரும்
எட்டி அணைத்தால்
எல்லாம் கூடும்
தர்ம மீறல்
செய்வோன் எல்லாம்
ஷெய்த்தான் என்றே
தேர்ந்து கொள்க!
எறி
ஷைத்தான்களுக்குக்
கல்லை எறி
சீற்றம் அதிகமெனில்
செருப்பை எறி!
சீற்றம் அழிந்தால்
சிறப்புண்டாகும்!
மாற்றம் நடந்தால்
மகிழ்வுண்டாகும்!
ஆசைகள் அறு
ஷைத்தான் துரத்து
நெஞ்சைக் கழுவு
அன்பைப் பகிர்
அவ்வாறாயின் -
அணைத்துத் தழுவு
பெருநாள் களி!
வாழ்த்துக்கள்!
26.11.09
Posted by Ashroff Shihabdeen.